×

விருத்தாசலத்தில் பரபரப்பு பால் கடை உரிமையாளரை கத்தியால் சரமாரியாக வெட்டிய 2 பேர் கைது

வேப்பூர், மே 30: விருத்தாசலம் பெரியார்நகரில் தனியார் பால் கடை செயல்பட்டு வருகிறது. நாச்சியார் பேட்டை பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மகன் ராம்குமார்(22) என்பவர் இந்த கடையின் உரிமையாளர் ஆவார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ராம்குமார் பால் கடையில் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் பட்டாகத்தியுடன் பால் கடையில் புகுந்து ராம்குமாரை சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் ராம்குமார் அலற அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியது. இதையடுத்து, மர்ம கும்பல் அங்கிருந்து காரில் தப்பியோடியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ராம்குமாரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் அங்கிருந்த தடயங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்தநிலையில் முன்விரோதம் காரணமாக விருத்தாசலம் அடுத்த பூதாமூர் பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் மணிகண்டன் (26), விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்த சேகர் மகன் அருண்ராஜ் (27) ஆகிய இருவரும் ராம்குமாரை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து விருத்தாசலம் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

The post விருத்தாசலத்தில் பரபரப்பு பால் கடை உரிமையாளரை கத்தியால் சரமாரியாக வெட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vridthachalam Veypur ,Vriddhachalam Periyarnagar ,Ravikumar ,Nachiar Pettai ,
× RELATED சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர்...